அழகாய் கைகள் நீட்டி அழைத்தாய்..! அருகினில் வந்தேன்..! என் நிழல் உணர்ந்து.. மீன் விழிகள் உருட்டி... விரைந்து எனை நோக்கினாய்..! உனக்கு மேலே என் கரங்கள் ஊர்ந்தன..! சட்டென.. இறுக்கமாய்.. விரல்களை பிடித்தாய்..! பிடித்த இதமான பிடியில் உணர்ந்தேன்.. மழலையின் சுகத்தை..!
உலகை துறக்கவும் துணிந்தேன்! உனைப்பிரிந்த சில தினங்களில்… கன்னக்குழி விழும் நம்குழந்தை சொன்னது உன் மறுஜென்மத்தை! நடைமுறை புரிந்தது! மெல்ல நான் உன் கன்னத்தில் முத்தமிட்டேன்!
எந்த நேரம் நான் எதை கேட்பேன் என்பதை தெள்ளமாய் அறிந்து, அந்த நேரம் அதை எடுத்துக்கொண்டு, “ஐயோ! மறந்துவிட்டேனே!” என்று சிறிதுநேரம் செல்லமாய் ஊடி, பின் அதை அளித்து புன்னகைக்கையில், அறிந்தேனடி என்மீதான உன் சிநேகத்தை!
எத்தனை தூரம் பயணித்தும் எத்தனை முறை வெற்றியடைந்தும் திருப்தி இல்லாமல் வாழ்க்கை! சட்டென ஞானம் பிறக்க, சொன்னேன் “வட்டமடா வாழ்க்கை” என்று!! புன்னகைத்துக் கொண்டே… :-) !
கண்கள் அனிச்சையாய் கலங்க நாக்கினை நறுக்கென்று கடித்துக்கொண்டேன்..! அரை நொடியில் அத்தனையும் உணர்ந்துகொண்டு அருகினில் வந்து தலைகோதுகையில்.. மெல்ல உணர்கிறேனடி தாய்மையின் மகத்துவத்தை..!