Tuesday, November 27, 2007

இதழ்கள் தொட்டபின்னே !

நின் இதழ்கள் தொட்டபின்னே
நீரும் சுவை கொண்டதடி பெண்ணே!
பழச்சாறும் சுவை கெட்டதடி கண்ணே!

உன் ஒற்றை முத்தத்தில்!

நின்னை படைக்கையில் பிரம்மன்
நிச்சயம் மது அருந்தி இருப்பான் -இல்லை
நிரம்ப ஐஸ்கிரீம் உண்டிருப்பான்! - பின்னே?!
இப்படி உளறுகிறேன் .... உன் ஒற்றை முத்தத்தில்!

Thursday, November 22, 2007

சிநேகம் தெரியுதடி..!

தூரத்தில் இருந்தாலும், நீ தடுமாறும்போது
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!

பொய்-முத்தம்..!




பொய் சொன்னால் போஜனம் கிடைக்காதாம்!
எவன் சொன்னது? சுத்தப் பொய்! - சிறு


பொய் சொன்னேன் உன்முத்தம் கிடைத்தது!
இதழ்ரசம் அருந்தினால் இவையெலாம் புரியும்!

அவள் துப்பட்டாவின் ஸ்பரிசம்!

எதிர்பாராமல் கொஞ்சிய நின்
துப்பட்டாவின் குஞ்சங்கள்!

உடல்சேராமல் உயிரை என்
முகத்தோடு உறிஞ்சும்!

தேவையை பூர்த்திசெய்த
தென்றலுக்கு நன்றி!

Wednesday, November 21, 2007

பறக்க எதற்கு இறக்கை?


பறக்க எதற்கு இறக்கை?
என்னவளை கடக்க முயலடா! போதும்.

நிழலடி நான் உனக்கு!


உனை தொடரல் வரம் எனக்கு!
எனை மிதித்தல் சுகம் உனக்கு!
நிழலடி நான் உனக்கு!

Tuesday, November 20, 2007

தொடரலும் சுகமோ..?!



எத்தனை வடிவம் உனக்கு! எண்களாய் நீ!
உனைச்சுற்றும் ஒரே வடிவம் எனக்கு! முள்ளாய்!



நீதொட பரிணமித்தேன் இத்தனை உருவும்!
நீ சொல்லிய பதிலில் துள்ளித் தொட்டேன்! ஒரு நொடியில்!

Thursday, July 5, 2007

பேதை நினைவுகள்..!

பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தாள் - உடனே

பன்னிரெண்டு நூறுகளுக்கு ஒரு வேலை காத்திருந்தது!

இருந்தும் பொறியியல் படித்தாள் - இன்று

இருபது ஆயிரங்கள் ஒவ்வொரு மாதமும்!

இருந்தும் மேற்படிப்புக்கு ஏற்பாடுகள் ஏராளம்!

பின்னே இலகரங்களில் மாதச்சம்பளமாம்!

படித்த அவள் இப்படி நினைக்கிறாள்..!


இரு பிள்ளைகள் பெற்றேன்

ஒரு பிள்ளை இடுப்பில்..

தலைக்கு நாற்பது நிதமும்

தப்பாமல் வயிறு நிரம்பிட..


இடுப்பில் இருப்பவன் இறங்கட்டும் நடக்க

இன்னொரு பிள்ளை அடுத்த வருடம்..!

இதுமட்டும் நடந்தால் இருமடங்காகும்

என் குடும்ப வருமானம்...!!

பேதை என் நினைவுகள் இப்படி..!?!


சாலை ஓர பிச்சைக்காரியாய்

சால இன்பமாய் நானும்..!

சிவப்பு விளக்கு விழுந்தது.

" சிவகாமி.. அந்த காராண்ட போ..! "

அய்யா..! அம்மா! கைகள் நீள நான் களத்தில்.

Wednesday, May 30, 2007

கண நேரம்..!

கண நேர சலனம்..
ஒரு உயிர் ஜனித்தது..! என் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.!
கண நேர தாமதம்..
ஒரு உயிர் பிழைத்தது. .! என் வழியில் ஓர் எறும்பு..!

Wednesday, May 23, 2007

வானமே கர்வப்படாதே..!

என் சிறகுகள் சிறியவை தான்..!
வானமே கர்வப்படாதே..! - என்
ஆயுளுக்குள் உனை அளந்து காட்டுவேன்..!

Wednesday, May 16, 2007

பெண்டிரும் கயல்நிகரே..!!

(பெண்களும் மீன்களுக்கு ஒப்பாகும் என சிலேடையில் கூறல்..! )

அலையாட புறஞ்சடையும் நீராட வழுவழுப்பும்
சலசலத்த வளையிருப்பும் நடனத்து தீண்டுதலும்
சதையுண்ணுஞ் சாதிக்கே நாண்சேர உணவாகி
கார் அகல பசலையுஞ் சுமக்குமெம் கெண்டைவிழிப்
பெண்டிரும் கயல்நிகரே..!!

பொருள்:
மீன்
: அலைபோல ஆடும் வாலிருக்கும், நீரில் ஆடி வழுவழுக்கும், சலசலப்புடன் வளைகளில் இருக்கும், நாம் தொடும்பொழுது துள்ளி நடனமாடும், மாமிசம் உண்பவர்களுக்கு உணவாகும். கார்காலம் நீங்கி வாடை வரும்பொழுது ஒருவித பசலை போன்ற நோயுறும். பெண்ணின் கண் போன்றது மீன்.

பெண்: அலைபோல ஆடும் சடையுடனிருப்பாள், பூப்படைந்து பூப்பு நீராடுவாள், பருவத்தில் வழுவழுப்பான தேகம் கொண்ட அவளை தலைவன் தீண்டும் பொழுது, வெட்கத்தில் நடனமாய் நெளிவாள். சதையுண்ணும் - பெண்ணுடல் சுகிக்கும் இனமாகிய தலைவனுக்கு விருந்தாகுவாள். கூடல் கார்கால நிகழ்வு. கூடல் நீங்கி தலைவனை பிரிகையில் பிரிவுத்துயரால் நெற்றியில் பசலை நோய் வரும். மீன் போன்ற கண்ணுடையவள்.

Thursday, April 19, 2007

புல்லாங்குழல்..!!


வாயுளி கொண்டு வண்டது துளையிட
வழியிடை ரீங்கார உளறலதில் உறைந்திட
வேயுழல் தென்றலதில் வெட்கிப் புகுந்திட
பாய்ந்து வந்ததுவே நற்கானம். - அழகு மூங்கில்

புல்லாங்குழல் தான் இதன் புதுப்பரிமாணம்.

Thursday, April 5, 2007

கூடல்...!!

நம்கூடலில் விளைந்த...
மங்கல மணம்,
குளிர்வித்தது பூமியை...
மழையொடு மண்..!!

Monday, April 2, 2007

நெடுநாள் கனவு..!!

கவிஞனாக வேண்டும்..
நெடுநாள் கனவு..!!
நனவானது உன்னால்,
நீ வேண்டும் எனக்கு..
காதலிக்க அல்ல,
சகியே! மறுக்கவாவது..!!

எண்பதுகளில்...இது எதார்த்தம்...!

பிறந்த முதல்நாள் பிள்ளை அழுதது
தாய் சிரித்தாள் தழுவிக்கொண்டு,
நாட்கள் நகர்ந்தன உறவுகள் வினவின
பெண்ணை பெற்றாயோ இம்முறையும்?
வந்தோர் சென்றனர், தாய் அழுதாள்
குழந்தை சிரித்தது....கள்ளிப்பாலருந்தி...!!

Sunday, January 7, 2007

என் இந்தியா..!!

இந்தியா ஒளிர்கிறதாம்..! இருக்காதே பின்னே..?
நூறுகோடி சூரியன் ஓரிடத்தில் இருந்தால்..?!
மார்தட்டி சொல்வேன்..! மறுத்துப்பார் முடிந்தால்..
சூரியன் பூமியை சுற்றுகிறது இந்தியா இருப்பதால்..!
ஈருலகப்போர்கள் ஆயுதம் மலிந்ததால் நடந்திருக்கலாம்.
இந்தியாவும் போரிடுகிறது அறிவெனும் ஆயுதத்தால்..!
தடுக்க முடியாத தனிப்பெரும் படை இதோ..!
கத்தியின்றி ரத்தமின்றி கணிணியை கையில் கொண்டு..!